உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

திங்கள், 29 நவம்பர், 2010

மன்பதை கொண்ட தேசியவிலங்கு

ஆபிக்க காட்டிலே
அடர்ந்த மரங்கள் உள்ளன
அகவும் அலறும் பறவைகள்
அந்தக் காட்டில் உள்ளன
கொடு விலங்குக் கூட்டங்கள்
கொத்தித் தின்னும் கழுகுகள்
கொண்ட அடவி தன்னிலே

புள்ளிச் சிறுத்தைப் புலியது
எங்குமலைந்து திரிந்தது
வயிற்றுப் பசியைப் போக்கவே
அங்குமிங்கும் பார்த்தது
அங்கே குரங்கைக் கண்டது
அதனை வேட்டையாடவே
அணியமாகிக் கொண்டது

அக்குரங்கின் மடியில்பால்
அணைத்தபடி குருளையும்
அருந்திக் கொண்டு இருந்தது
அதனைக் காணா புலியதும்
வேட்டையிலே இறங்கிற்று
வேகமாக தாயதை
விழுத்திக் கொன்று விட்டது
கொன்ற அந்தக் குரங்கினை
கொண்டு சென்று மரத்திலே
தின்ன எண்ணிக் கொண்டது

ஒட்டிக் கொண்டு தாயதன்
உடம்பினோடு கிடந்தது
இடறுபட்டு வீழ்ததும்
குரலை எழுப்பிக் கிடந்தது
இரண்டொருநாள் பிறந்ததால்
ஏதும் செய்ய முடியலே

குரலைக் கேட்ட புலியது
குணத்தை மாற்றிக் கொண்டது
அன்புகொண்டு தாயைப்போல்
அரவணைக்க தொடங்கிற்று
அருகில் இருந்து பரிவுடன்
குருளை தன்னைக் காத்தது

காட்டு நாய்கள் வந்தன
கொடிய கூச்சல் போட்டன
உறுமிச் சிறுத்தை சீறவே
ஓட்டம் பிடித்தகன்றன
தாயை இழந்த குருளைக்கு
தானே தாயுமாயிற்று
நாவால் நக்கி குட்டிபோல்
நன்றாய் வளர்க்க எண்ணிற்று

என்ன சொல்வேன் தோழர்காள்
எண்ணமெல்லாம் குருளைக்காய்
ஏங்கித் துடித்ததென் மனம்
வேண்டுமென்றே மதத்துக்காய்
மாந்தயினத்து குழந்தையை

அழிக்கும் அரசை என்சொல்வேன்?
அழிக்கும் அரசை என்சொல்வேன்?


குறிப்பு: இது கற்பனையல்ல காட்சி
_ச.உதயன்_

ஞாயிறு, 21 நவம்பர், 2010

நடுகல் வழிபாடு

பூக்களைக் கோர்த்து வைக்கும்
கார்த்திகை மாதம்
பாக்களைச் சாற்றி வைக்கும்
கார்த்திகை மாதம்
சுட்டிகள் நிரைவகுக் கும்மே
கார்த்திகை மாதம்
சொந்தங்கள் கூடும் திங்கள்
கார்த்திகை மாதம்

நடுகல் வழிபாடு
நடக்கும் காலம்
நெஞ்சிலே சூளுரைக்கும்
நேரிய காலம்
நாயகன் கொள்கையினை
உரைக்கும் காலம்
நம்வீரர் மாதவங்கள்
உணர்த்தும் காலம்

உத்தம மறவர்தாம்
உதிர்ந்த போதும்
உயிரினை உதிரத்தை
ஊற்றினார் பாரும்
எத்தனை இடர்வரினும்
எமக்காக நின்று
எத்துணை புரிந்தார்கள்
எம்நிலம் வென்று

எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் தமிழா
செந்நன்றி மறந்தேதான்
வாழ்வது முறையா
சந்தன மேனியர்தம்
கல்லறை சென்று
சிரம்தாழ்த்தி வணங்குவோமே
சீரோடு நின்று

கார்முகில் அகன்றோடும்
கங்குலும் விலகும்
பாருங்கள் ஒருநாள்நம்
பைந்தமிழ் ஒலிக்கும்
ஒலிக்கின்ற காற்றோடு
ஓசையாய் கலந்து
தமிழீழம் நிறைப்பார்கள்
தமிழோடு வாழ்ந்து